அண்ணா பல்கலை. விவகாரத்தில் தொடர்பு படுத்தி பேசியதற்காக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் வைத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள், தண்டனை குறைப்பு அல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளீர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, குற்றவாளி ஞானசேகரனுக்கு அந்த பகுதியில் வசித்து வந்த கோட்டூர் சண்முகம் என்பவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், கோட்டூர் சண்முகம் அண்ணா பல்கலைக் கழத்தின் முன்னாள் பிஆர்ஓவாக இருந்த நடராஜனுக்கும் நெருங்கிய நண்பர் என்றும் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் ஞானசேகரன் கோட்டூர் சண்முகத்துடன் செல்போனில் பேசியதாகவும், இதையடுத்து கோட்டூர் சண்முகம் நடராஜனிடம் பேசி பல்கலைக்கழகத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சியை அழித்ததாக கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள நிலையில் அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டு தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக நடராஜன் கூறியிருக்கிறார். மேலும் அண்ணாமலை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையெனில், ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை மீது வழக்கு தொடர நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.