அடுத்த தலைமுறையை காப்பாற்ற ஆட்சியில் இருந்து திமுகவை அகற்ற வேண்டும்: எச்.ராஜா!

தமிழகத்தின் அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்ததினத்தையொட்டி, அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அந்தந்தப் பகுதி சுதந்திரப் போராட்ட வீரர்களின் சரித்திரத்தை 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தற்போது தமிழக மக்கள் ஊழல், போதை பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். 2026 தேர்தலில் ஊழல், நிர்வாக குறைபாடுள்ள அரசை எதிர்த்து மட்டுமல்ல, போதையையும் தடுக்கத்தான் வாக்களிக்க வேண்டும். அதிகமாக போதை புழக்கமுள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முன்பாக போதைப் பொட்டலங்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர், பொறியாளர், தணிக்கையாளர் ஆகியோரது குழந்தைகளை நாசம் செய்கின்றனர். தமிழகத்தின் அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்.

ஒரே ஒரு எம்எல்ஏவாக வெற்றிபெற்று, அதையும் ராஜினாமா செய்தவர் கருணாநிதி. இதனால் திமுகவை அசைக்க முடியாத சக்தி என நினைக்க வேண்டாம். 2026 தேர்தலில் இருக்கின்ற இடம் தெரியாமல் திமுக தூக்கி எறியப்படும். முருகன் மாநாட்டை தடுக்க முயற்சித்து இந்துக்களுக்கு எதிரான கட்சியாக திமுக மாறியுள்ளது. இதனால் இந்துக்களாலேயே திமுக தூக்கி எறியப்படும். இவ்வாறு அவர் கூறினார்.