கூட்டணி குறித்து வைகோவுடன் யாரும் பேசவில்லை: துரை வைகோ!

பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மதிமுக எம்பி துரை வைகோ உறுதியாக கூறியுள்ளார்.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.முருகன், செப்டம்பரில் திமுக கூட்டணி உடையும். திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களில் பாஜக கூட்டணி விரிவடையும். இந்த கட்சி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி தான். புதிதாக வரவிருக்கும் கட்சிகள் யார் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார். வாஜ்பாய் ஆட்சியில் பாஜகவுடன் இருந்த கட்சி என்று எல்.முருகன் கூறியதால், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறதா என்ற கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், எல்.முருகன் கூறிய கருத்து உண்மை தான். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று கூறினார். அப்போது மதிமுக உடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, இப்போது விரிவாக எதையும் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார்.

திமுக கூட்டணியை பொறுத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, முஸ்லீம் லீக் என்று அனைத்து கட்சிகளும் இணக்கமாக உள்ளன. தற்போது அந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது இணைந்து கொண்டது. திமுக ஆட்சி மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை எந்த கட்சியும் கூட்டணியில் இருந்து விலகவில்லை.

இந்த நிலையில் எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் கருத்து குறித்து மதிமுக எம்பி துரை வைகோ விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி துரை வைகோ பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி குறித்து நூற்றுக்கு நூறு சதவிகிதம் எதுவும் பேசவில்லை. கூட்டணி தொடர்பாக வைகோவும் பாஜகவுடன் பேசவில்லை என்பதும் உறுதி. நயினார் நாகேந்திரன் பேசியது அவரின் அரசியல் யுக்தியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் எல்.முருகன் கூறியது எந்த கட்சி என்ற விவாதம் நடந்து வருகிறது. அதேபோல் திமுக கூட்டணியை பிரிப்பதில் பாஜக தீவிரமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விசிகவை கூட்டணியில் இருந்து பிரிக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப இன்னொரு பக்கம் விசிக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.