வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பிய எம்.பி.க்கள் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, உலக நாடுகளின் தலைவர்கள் கூறிய கருத்துகள் தொடர்பாக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி விவாதித்தார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பகல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் பணிந்தது. கடந்த மே 10-ம் தேதி இரு நாடுகளிடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த சூழலில், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைப்பதற்காக சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினர் கடந்த 10 நாட்கள் பல்வேறு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அந்நாடு களின் தலைவர்களை சந்தித்துப் பேசியது. சமாஜ்வாதி எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பான், இந் தோனேஷியா, மலேசியா, கொரியா, சிங்கப்பூர் நாடுகளில் பயணம் மேற்கொண்டது.
அதேபோல, சிவசேனா எம்.பி. காந்த் ஷிண்டே தலைமையிலான குழு ஐக்கிய அரபு அமீரகம், லைபீரியா, காங்கோ, சியேரா லியோனி நாடுகளில் பயணம் மேற்கொண்டது. தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) எம்.பி. சுப்ரியா சுலே தலைமையிலான குழு எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா நாடுகளிலும், பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, டென்மார்க் நாடுகளிலும், பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டன. ஏழு குழுக்களும் மொத்தம் 33 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு அடுத்தடுத்து திரும்பின. இறுதியாக சசி தரூர் தலைமையிலான குழு நேற்று டெல்லி திரும்பியது.
ஏழு குழுக்களின் பயணம் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
இந்தியா ஒருபோதும் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ளாது என்பது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் உலகுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பாவின் ஓர் அமைப்பான டிஆர்எஃப், பகல்காம் தீவிரவாத தாக்குதலை நடத்தியது. இதை ஆதாரத்துடன் உலக நாடுகளிடம் எடுத்துரைத்துள்ளோம். `ஆபரேஷன் சிந்தூர்’ நட வடிக்கையின்போது பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட்டன. அந்த நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் போரை நிறுத்த பாகிஸ்தானே வேண்டுகோள் விடுத்தது. இதன்பிறகே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்தால் இந்தியா தகுந்த நடவடிக்கை எடுக்கும். தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும். இதற்காகவே 59 எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் உலக நாடுகளில் வெற்றிகரமாக சுற்றுப் பயணத்தை நிறைவு செய்திருக்கின்றன.
1994-ல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உயர்நிலைக் கூட்டத்துக்கு சிறப்பு குழுவை அனுப்பினார். இந்த குழுவுக்கு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாய் தலைமை வகித்தார். 2008-ல் மும்பை தாக்குதல் தொடர்பாக அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பல்வேறு நாடுகளுக்கு சிறப்புக் குழுக்களை அனுப்பினார். இந்த மரபை பின்பற்றியே தற்போது 33 நாடுகளுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்கள் அனுப்பப்பட்டன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், திமுக எம்.பி. கனிமொழி, அதிமுக எம்.பி. தம்பிதுரை உட்பட வெளிநாடு சென்று திரும்பிய அனைத்து எம்.பி.க்களும் டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமரின் வீட்டுக்கு நேற்று மாலை சென்றனர். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கூறிய கருத்துகள் குறித்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கூறிய கருத்துகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டன. அனைத்து எம்.பி.க்களும் பிரதமர் மோடி சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.