ஈரோடு மாவட்ட எல்லையில் இருந்து மேட்டூர் வரை 11 கிமீ முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ரோடு ஷோ’!

ஈரோடு மாவட்ட எல்லையில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் வரை 11 கிமீ. தொலைவுக்கு நடை பெற்ற ‘ரோடு ஷோ’வில் முதல்வர் ஸ்டாலின், சாலையில் நடந்தபடி, வழிநெடுகிலும் பொதுமக்கள், திமுகவினரைச் சந்தித்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் சேலம் மாவட்ட எல்லையான பெரும் பள்ளம் கிராமத்துக்கு வேனில் வந்தடைந்தார். அவருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் செங்கோல் அளித்து, மாவட்டச் செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி எம்.பி,எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட திமுகவினர் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு ஆகியோரும் உடன் வந்தனர்.

பெரும்பள்ளம் கிராமத்தில் இருந்து மேட்டூர் வரை 11 கிமீ தூரத்துக்கு சாலையில் முதல்வர் நடந்தபடி, வழிநெடுகிலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தபடியே, மேட்டூர் வந்தடைந்தார். திமுக கொடி, முதல்வர், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் படங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி, மக்களும், திமுகவினரும் சாலை நெடுகிலும் காத்திருந்து, முதல்வர் ஸ்டாலினை வரவேற்று ஆரவாரம் செய்தனர். மேலும், பொதுமக்கள் ஆங்காங்கே முதல்வரிடம் மனுக்களையும் வழங்கினர்.

மேலும், முதல்வருடன் பொதுமக்கள் கை குலுக்கியும், போட்டோ, செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். வழியில் சிறுமி ஒருவர் வழங்கிய திமுக கொடியை முதல்வர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். ரோடு ஷோவின்போது, வழியில் நவப்பட்டி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து, சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையும் நடத்தினார்.

முதல்வரின் வருகையையொட்டி, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என கலை நிகழ்ச்சிகளால் மேட்டூர் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. முதல்வரின் நிகழ்ச்சியை ஒட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், ஐஜி செந்தில்குமார், டிஐஜி உமா மற்றும் போலீஸார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, ஈரோடு மாவட்டம் பவானி பழைய பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த பொது மக்கள் மற்றும் திமுகவினர், முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த முதல்வர், வாகனத்தில் இருந்து இறங்கி, சிறிது தூரம் சாலையில் நடந்து சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். மூதாட்டிகள், பெண்கள், பள்ளி மாணவிகள் என பலரும் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பொதுமக்களுடன் கைகுலுக்கி அவர்களை முதல்வர் உற்சாகப்படுத்தினார்.

மேட்டூர் அணையில் இன்று (12-ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, சேலம் வரும் முதல்வர், இரும்பாலை சாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.