‘ஹிந்து’ என்ற வார்த்தையை நீக்குவது ‘இந்து’ இன அழிப்பின் அப்பட்டமான வெளிப்பாடு: எச்.ராஜா!

தமிழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில் ‘ஹிந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு சாதி பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘ஹிந்து’ என்ற வார்த்தையை நீக்குவது ‘இந்து’ இன அழிப்பின் அப்பட்டமான வெளிப்பாடு என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு பெறுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் சாதி அடையாளத்தை நீக்க வேண்டும் என நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அறிக்கை அளித்தது. ஆனாலும் இட ஒதுக்கீட்டுக்கு சாதி சான்றிதழ் தவிர்க்க முடியாதது என்பதால் அது அரசு சார்பிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சாதிச் சான்றிதழில் சாதியோடு சேர்ந்து மதமும் குறிப்பிடப்படும். உதாரணத்திற்கு இந்து மறவர், இந்து நாடார், இந்து வன்னியர் எனவே குறிப்பிடப்படும். இது அனைத்து சாதிகளுக்கும் இருக்கும் வழக்கம் தான். இந்த நிலையில் ஆன்லைனில் சாதி சான்றிதழ் பெறும்போது ‘ஹிந்து’ என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டு மறவர், நாடார் எனவே வருகிறது என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைனில் பெறப்படும் ஜாதி சான்றிதழ் பிரிவுகளுக்கு முன் இடம்பெறும் ‘ஹிந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் ஆன எச்.ராஜா.

இது தொடர்பாக எச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

ஜாதி சான்றிதழில் “ஹிந்து” என்கிற மதத்தின் பெயரை நீக்குவது திட்டமிட்ட “ஹிந்து” இன அழிப்பின் அப்பட்டமான வெளிப்பாடு. ஜாதி சான்றிதழில் ஹிந்து மதத்திலுள்ள ஒவ்வொரு உட்பிரிவை குறிப்பிடும் போதும் அந்த பிரிவின் பெயருக்கு முன்னால் “ஹிந்து” என மதத்தின் பெயரையும் சேர்த்து பதிவு செய்வது தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் வழக்கம்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து ஹிந்து மதத்தின் அடையாளங்களையும், அதன் அடிப்படை விஷயங்களையும் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அழிப்பது என்பது ஹிந்து இன அழிப்பின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை. ஜாதி சான்றிதழ்களில் ஹிந்து மதத்தின் பெயரை நீக்கி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சனாதன ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா கொசுக்களை அழிப்பது போல அழிப்பேன் என்று பேசியவர் துணை முதலமைச்சராக இருக்கும் ஆட்சியில் இதைவிட அதிக கொடுமைகள் நாளடைவில் ஹிந்துக்களுக்கு ஏற்படும் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஜாதி சான்றிதழில் ஹிந்துக்களின் சமூகப்பிரிவை குறிப்பிடும் இடத்தில் ஹிந்து என்கிற மதத்தின் பெயரோடு சேர்த்து குறிப்பிடும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க பள்ளிகல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை நிர்வாகத்திற்கு முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும். ஜாதி சான்றிதழ்களில் ஹிந்து மதத்தின் பெயரை நீக்கிவிட்டு வழங்கப்பட்ட சான்றிதழ்களை திரும்பப்பெற்று புதிதாக ஹிந்து என பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் வழங்க தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.