மேஜரான பெண்கள் திரைக் கதாநாயகர்கள் என்றாலும் ஒரு டிஸ்டன்ஸ் பின்பற்ற வேண்டும் என்று தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தவெக கல்வி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் விஜய் நடந்து கொண்ட விதத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதன் காரணமாக தவெக தொண்டர்கள் மற்றும் தவாக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜயிடம் மன்னிப்பு கேட்க முடியாது, விஜய் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேல்முருகன் கூறி வருகிறார். நாளை தவெக சார்பாக 3ஆம் ஆண்டு கல்வி விருது விழா நடக்கவுள்ள நிலையில், மீண்டும் வேல்முருகன் கடுமையாக பேசி இருக்கிறார்.
இதுதொடர்பாக விழுப்புரத்தில் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
விஜய் 3 ஆண்டுகளாக தான் மாணவர்களுக்கு பரிசு கொடுக்கிறார். நான் 25 ஆண்டுகளாக மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறேன். மாவட்டத்திற்கு ஒரு பொறியியல் கல்லூரி என்ற கருத்து என்னுடையது. விழுப்புரம், கடலூர் பகுதிகளைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு படிக்க உதவி வருகிறேன். மேஜரான பெண்களை சொந்த அப்பாவாக இருந்தாலும், மடியில் அமர வைக்க மாட்டோம். சித்தப்பா, பெரியப்பாவாக இருந்தாலும் சிறிய இடைவெளியுடன் இருப்போம். அதனால் அது தமிழர்களின் கலாச்சாரம் அல்ல. டிஸ்கோத் என்பது உருவாக்கப்பட்டு அரைகுறை ஆடைகளோடு ஆட அனுமதிக்கப்படுகிறது. ஈசிஆர், பாண்டிச்சேரியில் புதிய கலாச்சாரங்கள் உருவாகிறது. 3 பெண்களுக்கு தகப்பனாக சொல்கிறேன்.. என் இளைய சமூகம் கண்முன்னால் சீரழிவதை நினைத்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில் கூறினேன்.
அந்த கருத்தை விஜய் ரசிகர்கள் உங்க தலைவரை பார்க்க வந்த பிள்ளைகள், பெற்றோர் ஆகியோரை நான் சொன்ன கருத்துடன் ஒப்பிட்டு கொச்சைப்படுத்தி வருகிறீர்கள். அதனால் நீங்கள் தான் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கல்விக்கு உதவும் சூர்யா என்ன கேமரா முன் விளம்பரம் செய்கிறாரா.. விஜய் கட்டிப்பிடித்ததை தவறு என்று சொல்லவில்லை.. நான் சொல்வது சினிமாக்காரர்களை கட்டிப்பிடிப்பது நமது கலாச்சாரம் இல்லை என்றுதான் சொல்கிறேன். தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கட்டிப்பிடிப்பதை நான் தவறு என்று சொல்லவில்லை.. ஆனால் திரைக் கதாநாயகன் என்றாலும் ஒரு டிஸ்டன்ஸை பின்பற்ற வேண்டும். லைகா பிரச்சனை தொடங்கி ஜனநாயகன் படம் வரை விஜய்-க்கு என் மீது ஏதோ ஒரு வன்மம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.