மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்?: அன்புமணி!

“மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்? குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 போதுமா?” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை; நெல்லுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள கொள்முதல் விலையும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக எதையும் செய்யாமல் துரோகம் செய்வதை மட்டுமே தமிழக அரசு தொழிலாகக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. குறுவைப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே பாசனத்திற்கு காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் தயாராக வேண்டும். விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான விதை, உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது தான் குறுவைத் தொகுப்பு திட்டமாகும். அதனால், அந்தத் திட்டத்தை குறைந்தது இரு வாரங்களுக்கு முன்பாவது அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட பிறகும் கூட அத்திட்டத்தை அறிவிக்காதது விவசாயிகள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது.

அதேபோல், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.2500, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.2,545 வீதம் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் முதலமைச்சர், அதை ஏதோ தமது அரசின் சாதனை போல கூறியிருக்கிறார். நெல்லுக்கு தமிழக அரசு வழக்கமாக வழங்கி வரும் கொள்முதல் விலையை முறையே ரூ.26 வீதமும், ரூ.36 வீதமும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இது ஒன்றும் சாதனையல்ல.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இது போதுமானதல்ல. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் துயரைத் துடைக்கும் வகையில் மத்திய அரசிடம் பேசி கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,700 வீதம் உயர்த்தச் செய்ய வேண்டும். மாநில அரசு அதன் பங்காக ரூ.800 ஊக்கத் தொகை வழங்குவதன் மூலம் குவிண்டாலுக்கு ரூ.3500 கிடைக்க வகை செய்ய வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை ஆகும்.

பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஒடிசாவில் குவிண்டாலுக்கு ரூ.800 வீதமும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலங்கானாவில் குவிண்டாலுக்கு ரூ.500 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் நிலையில் தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையை ரூ.800 ஆக உயர்த்துவது சாத்தியமற்றதல்ல. ஆனால், அவ்வாறு செய்ய தமிழக ஆட்சியாளர்களுக்கு மனம் தான் வரவில்லை.

விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்திருப்பதாகக் கூறும் தமிழக அரசு, அது உண்மை என்றால் நெல்லுக்கான கொள்முதல் விலைக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.800 ஆக உயர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி, வழக்கமான பொருள்களுடன் ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் சேர்த்து குறுவைத் தொகுப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.