பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
பகல்காம் தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தியாவைச் சேர்ந்த பலரும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது அம்பலமானது. இதில் அரியானாவின் ஹிசாரை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா (வயது 33) முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டார். கடந்த மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்ட அவர், என்.ஐ.ஏ. மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகளால் தீவிரமாக விசாரணை நடத்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்றக்காவலை வருகிற 23-ந்தேதி வரை கோர்ட்டு நீட்டித்து உள்ளது.
இதற்கிடையே ஜோதி மல்கோத்ராவுக்கு ஜாமீன் கேட்டு ஹிசார் முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சுனில் குமார் நேற்று விசாரித்தார். அப்போது ஜோதிக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருவதால் இடையில் அவரை ஜாமீனில் விடக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜோதி மல்கோத்ராவுக்கு ஜாமீன் மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் காணொலி மூலம் ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.