கிரானைட் முறைகேடு வழக்கு: துரை தயாநிதி மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய வழக்கில் துரை தயாநிதியின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது கடந்த 2012-ல் கீழவளவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது நீதிமன்றத்தில் 2018-ல் போலீஸார் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த முறைகேடு தொடர்பாக துரை தயாநிதி உள்ளிட்டோர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. பின்னர் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தற்காலிகமாக முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி துரை தயாநிதி தரப்பில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி சண்முகவேல் முன்பு இன்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தது. துரை தயாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “துரை தயாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மனரீதியான பிரச்சினைகள் இருப்பதால் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்,” என்றார். அமலாக்கத்துறை வழக்கறிஞர், “துரை தயாநிதியை நேரில் ஆஜர்படுத்தி அவரது மனநிலையை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் சிகிச்சை குறித்த முழுமையான மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.