கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. கோயில் இடத்தை அடக்க ஸ்தலமாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி, இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய அல்லது எரியூட்ட, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இடங்களை தவிர்த்து, வேறு எந்த இடத்தையும் பயன்படுத்த கூடாது.
இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ திருச்செந்தூரில் அரசு நிலம் இல்லை என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு நிலம், நத்தம் புறம்போக்கு நிலம் இருப்பதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது. உடல்களை அடக்கம் செய்ய மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.