கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் ராணுவம்.
‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடி பதிலடியாக இந்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பகுதிகளில் காட்டுமிராண்டித்தனமான, குழந்தைகளைக் கொல்லும் சியோனிச பயங்கரவாத ஆட்சியாளர்களால் நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் நாட்டின் தற்காப்பு பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஒரு வலிமையான மற்றும் துல்லியமான பதிலடியைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம், ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகள் கண்டறியப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், இஸ்ரேல் முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. மேலும் அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
இந்தத் தாக்குதல்கள் ஈரானை ஆத்திரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி எச்சரித்துள்ளார். தீய சியோனிச ஆட்சியைத் துயரத்தில் ஆழ்த்தும் அளவுக்கு ஒரு வலுவான பதிலடி கொடுக்கப் போவதாகவும் கமேனி உறுதியளித்தார்.
இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனியின் பதிவு செய்யப்பட்ட உரை அந்நாட்டு டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. அதில் இஸ்ரேல் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என கமேனி தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் இந்த குற்றத்திற்குத் தண்டனையின்றி தப்ப முடியாது என்றும், ஈரானின் பதிலடிக்கு எந்த தடையும் இருக்காது என்றும் கமேனி தெரிவித்தார்.
ஈரான் கடந்த சில ஆண்டுகளாகவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ஈரானிடம் அணு ஆயுதங்கள் செல்லக்கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. இதற்காகவே டிரம்ப் நிர்வாகத்தினர் ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. ஈரானிடம் அணு ஆயுதங்கள் வந்துவிட்டால் அது தனக்கு ஆபத்து என இஸ்ரேல் நினைக்கிறது. இதன் காரணமாகவே திடீரென இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அணுசக்தி விஞ்ஞானிகள், அணுசக்தி மையங்களைக் குறிவைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலால் அங்குப் பதற்றம் அதிகரித்துப் போர் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மீண்டும் மத்திய கிழக்கில் பிராந்திய மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலை தொடுத்து உள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருவதால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதன்படி, ‘நடப்பு சூழலை கருத்தில் கொண்டு ஈரானில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை கடைப்பிடிக்க வேண்டும்’ என கூறியுள்ளது. இதைப்போல இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்களும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜெருசலேமில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டு உள்ளது.