ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக நேற்று பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும், பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால், ‘‘அல்லவை செய்தொழுகும் வேந்து’’ என்று விமர்சிக்கப்பட்ட கொடுங்கோன்மையில் இருந்தும் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டிய ஒரு பிரிவு மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் திமுக ஆட்சியின் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் தான். அவர்களைக் காப்பாற்றுவது தான் பொறுப்புள்ள அரசியல் கட்சியின் கடமை என பாமக கருதுகிறது. தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதை விட, நல்லாட்சி வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
தமிழக மக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்றும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தான் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை போல தமிழகத்தில் நடைபெற்று வரும் விளம்பர மாடல் அரசால் தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பது தான் உண்மை. சமூகநீதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அரசு தான் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
திமுக அரசின் அவலங்கள் குறித்து மக்களிடம் விழிப்ப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும், மக்களிடம் இருந்து மோசமான ஆட்சியால் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியதும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பாமகவின் தலையாய கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றும் வகையில் பசுமைத் தாயகம் நாளான ஜூலை 25-ம் தேதி தொடங்கி, தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ம் தேதி வரை மொத்தம் 100 நாள்கள் கால அளவில் பாமகவின் தலைவர் மருத்துவர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கவுள்ளது. சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி, நலவாழ்வுக்கான உரிமை, மது – போதை பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகியவை அன்புமணி மேற்கொள்ளவுள்ள பயணத்தின் நோக்கங்கள் ஆகும்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் ஓர் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழக மக்களின் நலனுக்கானது. எனவே. உன்னத நோக்கம் கொண்ட இந்த பயணத்தில் அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்கும்படி அன்புடன் பாமக கேட்டு கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.