முருகனுக்கு காவி சாயம் பூச பாஜக முயற்சிப்பதாகவும், மனிதர்களை ஆண், பெண் எனப் பிரித்தவர்கள், இப்போது கடவுளையும் பிரிக்கின்றனர். முருகனை வைத்து அரசியல் செய்து ஓட்டு வாங்க முயல்கின்றனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் உள்ள சூலூரில் திராவிடர் கழகத்தின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிந்தனை செயலாக்க கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எழுதிய ‘உலகத் தலைவர் பெரியார்’ நூல் வெளியிடப்பட்டது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான ஆ.ராசா நூலை வெளியிட்டார். கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், தந்தை பெரியாரின் சுயமரியாதை, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு, பகுத்தறிவு ஆகிய கருத்துகளை மையப்படுத்தி சிந்தனைச் செயலாக்கக் கருத்தரங்கமும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியார்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முருகனுக்கு காவி சாயம் பூச முயற்சிக்கின்றனர். மனிதர்களை ஆண், பெண் எனப் பிரித்தவர்கள், இப்போது கடவுளையும் பிரிக்கின்றனர். முருகனை வைத்து அரசியல் செய்து ஓட்டு வாங்க முயல்கின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஆளுநர் ஆர்.என்.ரவி அடாவடி செய்கிறார். ஒன்றிய அரசு நிதி வழங்காமல் தடைகள் விதிக்கிறது. இத்தகைய சவால்களைத் தாண்டி ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.
திமுக கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணி. மற்ற கூட்டணிகளுக்கு பெயர் கூட இல்லை. அவை உருவாகியிருக்கின்றனவா, இல்லையா, அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்களா என்பதே தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அமித்ஷாவிடம் தங்கள் கட்சியை அடமானம் வைத்துள்ளன.
அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் போட்டோ சூட் குறித்து பேசுகையில், குற்றம் நடப்பதற்கு முன்பே தடுத்திருக்கலாம் எனக் கூறிய எதிர்க்கட்சியினர், இப்போது நடந்த விமான விபத்து குறித்து என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணிக்கு தெளிவான பெயரும், கொள்கையும் இருப்பதாகவும், மற்ற எதிர்க்கட்சிகள் தெளிவற்ற முறையில் செயல்படுகின்றன என்றார்.