“வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலையினை நீண்ட நெடிய புலன் விசாரணைக்கு உட்படுத்தி உண்மை நிலையை கொண்டு வந்து குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த வேண்டும். அவரது கொலைக்கு காரணமானவர்கள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்..
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலையினை நீண்ட நெடிய புலன் விசாரணைக்கு உட்படுத்தி உண்மை நிலையை கொண்டு வந்து குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த வேண்டும். வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் கொலை என்பது சர்வதேச குற்றவாளிகள் நடத்திய கொலை போல் காட்சியளிக்கிறது.
இந்தக் கொலை என்பது உலகத்தரத்தில் உருவாகும் ஆங்கில திரைப்படங்களில் வரும் கொலைக்காட்சி போல் தென்படுகிறது. எனவே இந்த கொலை ஏன் நடந்தது, எப்படி நடந்தது, எதற்காக நடந்தது, இதில் உள்ளடங்கி உள்ள மர்மம் என்ன என்பதை காவல்துறையினர் அனைத்து கட்ட விசாரணையும் மேற்கொண்டு, உண்மை நிலையை வெளிக் கொண்டு வந்து விரைவாக குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். நவீன கொலையாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்.
கொலையுண்டு போன வழக்கறிஞர் சக்கரவர்த்தி ராணிப்பேட்டை மாவட்டத்தின் இளைஞர் பிரிவின் செயலாளர் ஆவார். அவர் இந்த இயக்கத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர். அவருடைய இழப்பு நமது கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது கொலைக்கு காரணமானவர்கள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.