காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே காதல் திருமண விவகாரம் தொடர்பாக கடந்த 6-ம் தேதி 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது நேரில் ஆஜரான பூவை ஜெகன் மூர்த்தியை, கூட்டத்தை கூட்டாமல் தனியாக சென்று போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 10 மணியளவில் தன் வழக்கறிஞர்களுடன் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீஸார், சிறுவன் கடத்தல் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். வழக்கில் ஆஜராவதற்காக ஏடிஜிபி ஜெயராம் காவல் உடையில் வந்த நிலையில், போலீசார் கைது செய்வதற்கு முன்பாக சாதாரண உடைக்கு மாறினார். நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின் போலீசார் அவரை திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில்தான், ஏடிஜிபி ஜெயராம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கிறார். அவரது மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை அவசரமாக விசாரிக்க உள்ளது.