கீழடி ஆய்வுகள் தொடர்பாக எவ்வளவு அறிவியல் ஆதாரம் கேட்டாலும், அதனை கொடுக்கும் உண்மையும், வலிமையும் தங்களிடம் இருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. அதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும், ஒரேயொரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறி இருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.பல ஆண்டுகளாக ஆய்வு அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்த மத்திய அரசு, திடீரென திருப்பி அனுப்பிவிட்டு அறிவியல் ஆதாரங்கள் கேட்பது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை கண்டித்து திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் கீழடி குறித்து தொடர்பாக பேசி வரும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார். இதுகுறித்து சு.வெங்கடேசன் கூறியதாவது:-
மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் பாஜக அலுவலகத்தில் வந்து பேட்டி கொடுக்கிறார். கூடுதலான அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறார். இந்த அறிக்கையை கொடுத்த 2.75 ஆண்டுகளில் இந்த பதிலை நீதிமன்றத்தில் கூறி இருக்கலாம். அறிக்கையில் போதுமான ஆதாரம், சான்று ஆவணங்களில் கூறி இருக்கலாம். நாடாளுமன்றத்திலும் கூறவில்லை. 10 ஆண்டுகள் எப்போது கேட்டாலும், இன்னும் சில நாட்களில் வெளியிட்டுவிடுவோம் என்றார்கள். நாடாளுமன்றத்திற்கு உறுதிமொழி குழு வருவதற்கு 4 நாட்களுக்கு முன் இதனை சொல்கிறார். இதன் மூலமாக நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. முதலில் இது அறிக்கை வெளியிடுவது பிரச்சனையல்ல. கடந்த 10 ஆண்டுகளாக என்ன சொல்கிறார்களோ, செய்தார்களோ, அதனை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
கோமியம் குடித்தால் கோவிட் போய்விடும் என்று சொன்ன நீ, எங்களிடம் வந்து கூடுதல் அறிவியல் ஆதாரம் கேட்க நியாயம் வேண்டாமா? யாரிடம் வந்து யார் கேட்பது.. பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது.. அதன் மூலமாகவே கணேசனுக்கு யானை தலையை பொருத்த முடிந்தது என்று பேசியவர் பிரதமர் மோடி.. அவரின் அமைச்சரவையில் உள்ள ஒருவர், தமிழ்நாட்டிற்கு வந்து அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறார். பண்டைய இந்தியாவில் மரபணு அறிவியல் மிகச்சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. அதனால்தான் கர்ணனின் பிறப்பு சாத்தியமானது என்று பேசியவர் இதே விஷ்வகுரு. இவர் கூட பரவாயில்லை.. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஹர்ஷவர்தன்.. அவர் பண்டைய இந்தியாவில் விமான தொழிற்நுட்பம் சிறப்பாக இருந்தது. அதன் காரணமாக ராமாயணத்தில் புஷ்பக விமானத்தை பயன்படுத்த முடிந்தது என்று பேசினார். அதுவும் இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
இவ்வளவு அறிவியல்பூர்வமாக இருக்கும் இந்த ஆட்சியின் அமைச்சர் தான் நம்மிடம் வந்து கூடுதல் அறிவியல் ஆதாரம் கேட்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் பண்டைய காலத்தில் தொலைநோக்கு ஏவுகணைக்கான தொழில்நுட்பம் இருந்தது. அதன் காரணமாக பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த முடிந்தது என்று பேசினார். இவர்கள் தான் நம்மிடம் கூடுதல் அறிவியல் ஆதாரம் கேட்கிறார்.
இவர் கூட பரவாயில்லை.. முதல்வர் குமார் தேவ், செயற்கைகோள் இணைய தொழில்நுட்ப வசதி இருந்தது. அதனால்தான் குருஷேத்திர போரை தனது அறையில் இருந்து சஞ்சயனால் பார்த்து கதையை சொல்ல முடிந்தது என்றார். இவ்வளவு அறிவாளிகள் இருக்கும் கூட்டத்தில் இருக்கும் ஒருவர், தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வுகளை நடத்திய நம்மிடம் வந்து ஆதாரம் போதவில்லை.. கூடுதல் ஆதாரத்தை கேட்கிறார். கேட்டவரின் தகுதியை பற்றி நாம் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் எவ்வளவு ஆதாரங்கள் கேட்டாலும், அதனை கொடுக்க முடிகின்ற உண்மையும், வலிமையும் எங்களிடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.