திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது: வைகைச் செல்வன்!

ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவனை 20 நிமிடங்கள் சந்தித்து வைகை செல்வன் பேசி இருந்தார். அதுவெறும் இலக்கிய சந்திப்பு என்று திருமாவளவன் கூறி இருந்த நிலையில், வைகை செல்வன் கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டதாக கூறி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் சந்தித்து கொண்டனர். அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இரு கட்சியின் நிர்வாகிகளும் தங்களது கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று கூறி வருகின்றனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேசி வருகிறோம். அவர்கள் ஏற்கனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிதான். திருமாவளவன் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட்ட விரும்புகிறோம் என்று கூறி வந்தார். இந்த நிலையில் திருமாவளவன் – வைகை செல்வன் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அரசியல் எதுவும் பேசவில்லை என்று திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் ஒரே விடுதியில் தங்கியதால், அவர் ஒரு புத்தகம் கொடுத்தார். அப்போது அவரின் இலக்கியப் பணிகள் குறித்து பேசியதாக விளக்கம் அளித்தார். திமுக கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட திருமாவளவன் முக்கிய காரணமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் அதிமுக நிர்வாகியை சந்தித்தது பல்வேறு விவாதங்களை தொடங்கியது.

தற்போது காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருமாவளவன் உடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகை செல்வன், ஆளுங்கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதை தான் என்னால் சொல்ல முடியும். இது முதல் கட்டம்தான். அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்களை பார்க்க போகிறீர்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பூவை ஜெகன் மூர்த்தி விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அதிமுக கூட்டணியில் இருக்கிறார் என்ற காரணத்திற்காகவும், ஒரு எம்எல்ஏ என்ற நிலையை கூட கருத்தில் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியில் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதற்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளது என்று அரசு சொல்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம். அடுத்தக்கட்ட நிகழ்வுகளை பார்த்த பின்னரே, பேச முடியும் என்று தெரிவித்தார்.

அதிமுக உடன் பாமக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். ஆனால் பாமக உடைந்ததற்கு திமுக தான் காரணம் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளதை பார்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.