பாஜகவின் ஆட்சி அதிகார மிரட்டல்களை சமாளிக்க முடியாமல் திணறும் பழனிசாமி அதை மடைமாற்ற வீண் அவதூறுகளை பரப்புவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பழனிசாமி ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே தாக்கி மிரட்டும் சூழல் நிலவியது. தனது ஆட்சியில் நடந்த குற்றச் சம்பவங்களை மறந்துவிட்டு திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை பூதாகரமாகப் பேசுகிறார்.
பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி பெண்கள் பாதுகாப்பில் சமரசமின்றித் திமுக அரசு செயலாற்றி வருவதால்தான், இன்று இந்தியாவிலேயே அதிகமாகப் பெண்கள் வேலைக்குச் செல்வதும் பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளியான அதிமுக நிர்வாகிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த பழனிசாமிக்கு, முதல்வரை விமர்சிக்க தகுதி இல்லை.
அதிமுக ஆட்சியில் மக்களைச் சீரழித்த போதைப் பொருட்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது திமுக ஆட்சி. தனது கூட்டணிக்குள் நடக்கும் குஸ்தியையும், பாஜகவின் ஆட்சி அதிகார மிரட்டல்களையும் சமாளிக்க முடியாமல் திணறும் பழனிசாமி அதை மடைமாற்ற வீண் அவதூறுகளைக் கொட்டினால் அது மக்கள் மத்தியில் எடுபடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.