சாலையோரம், பொது இடங்களில் வைக்கப்பட்ட கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. கொடிக் கம்பங்களை அகற்றாவிடின் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும். மேலும் அந்த கொடி கம்பங்களுக்கு ரூ,1,000 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலம் காலமாக இருக்கும் அரசியல் கட்சிகள் தொடங்கி, புதிதாக தொடங்கிய அரசியல் கட்சிகள் வரை போட்டி போட்டுக் கொண்டு பொது இடங்களில் கொடிகள் வைப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சித்தன் என்பவர் தங்கள் பகுதியில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த ஜனவரி மாதம் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “தமிழகம் முழுவதும் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கொடி மூலம் தான் தங்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து அமாவாசை என்ற மற்றொரு அதிமுக நிர்வாகி கடந்த மார்ச் மாதம் மதுரை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்சில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “பொது இடங்களில் கொடிக்கம்பம் வைக்க தடை விதித்தது சரிதான்” என்று வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் 12 வாரங்களில் தமிழகம் முழுவதும் உள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு கொடி கம்பங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு கடந்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ்நாட்டில் 1,22,682 கொடி கம்பங்கள் கண்டறியப்பட்டு தற்போதுவரை 81,883 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடி கம்பம் வைக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,”பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கடந்த ஜனவரி மாதமே கொடி கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவு இன்னும் முழுமையாக அமல்படுத்தாததை சுட்டிக் காட்டி நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும், “வருகிற ஜூலை 2 ஆம் தேதிக்குள் கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும். பொது இடங்களில் நடப்படும் கொடிக் கம்பங்களுக்கு ரூ.1,000 கட்டணம் வசூலிக்க வேண்டும். சாலையின் நடுவில் அமைந்துள்ள தடுப்புகளில் கொடிக் கம்பங்கள் நடக்கக்கூடாது. பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வாடகை வசூல் செய்ய வேண்டும்” என்று அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
