முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகள் இடம்பெறாது: நயினார் நாகேந்திரன்!

முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகள் இடம்பெறாது, மாநாட்டுக்காக சென்னையில் இருந்து ஜூன் 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

முருகன் மாநாட்டுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஜூன் 21-ம் தேதி இரவு புறப்பட்டு, 22-ம் தேதி காலை மதுரை சென்றடையும். பின்னர், 22-ம் தேதி மாலை மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் சென்னை வந்தடையும். தமிழகம் முழுவதிலும் இருந்து மாநாட்டுக்காக வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டுக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அது உறுதி செய்யப்பட்டவில்லை. அதேபோல், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். இது அரசியல் கட்சி மாநாடு கிடையாது. திமுக நினைப்பதுபோல, மாநாட்டில் அரசியல் கருத்துகள் இடம்பெறாது. திமுகவினர் எங்கள் கூட்டணியைப் பற்றி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். நாங்கள் வலிமையாக இருப்பதால்தான் அவர்கள் எங்களை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஜூன் 22-ல் முருகனை கையில் எடுத்திருக்கிறோம். 2026-ல் தமிழகத்தையே கையில் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறும்போது, ‘முருக பக்தர்கள் மாநாட்டில் தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் திடலில், அறுபடை வீடுகளின் மாதிரி கண்காட்சி 16-ம் தேதி தொடங்கியுள்ளது. 22-ம் தேதி மாலை வரை இந்த கண்காட்சி நடைபெறும். முருகனைப் போற்றிய நக்கீரர் தொடங்கி கிருபானந்த வாரியார் வரை உள்ள அத்தனை முருகன் அடியாளர்கள் குறித்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இந்த 5 லட்சம் பேரும் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடக்கூடிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

முன்னதாக முருக பக்தர்கள் மாநாட்டுக்கான பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார். இந்த சந்திப்பில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.