எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், உலக குருதி கொடையாளர் தின நிகழ்வை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, 66 முறை ரத்த தானம் செய்துள்ளதை பாராட்டி “தொடர் தன்னார்வ குருதி கொடையாளர்“ என்கின்ற சிறப்பு விருதை அமைச்சருக்கு சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார் வழங்கினார்.

தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் ஆர்.சீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராயச்சி இயக்குநர் சங்குமணி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி உலக குருதி கொடையாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2009- 10-ம் ஆண்டில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்று பாதித்த குழந்தைகளுக்கு, தமிழக அரசு சார்பில் அறக்கட்டளை தொடங்குவதற்கு ரூ.5 கோடி நிதி கொடுத்தார். அந்த நிதி ஆதாரத்தின் மூலம், அதில் கிடைக்கப்பெறுகிற வட்டி தொகையை கொண்டு 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்துக்கு ஆண்டுதோறும் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் இருந்து ரூ.25 கோடி நிதி, தொகுப்பு நிதியாக வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து கிடைக்கும் நிதி ஆதாரத்தை கொண்டு எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளான, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவியாக மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்காக 7,618 குழந்தைகளுக்கு ரூ.1.89 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

எச்ஐவி – எய்ட்ஸ் தொற்று, பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முதல்கட்டமாக 11 கல்லூரிகளில் புதிதாக செஞ்சுருள் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வளரிளம் பருவத்தினருக்கு எச்ஐவி – எய்ட்ஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வை வழங்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 11 பள்ளிகளில் வாழ்வியல் திறன் பயிற்சி தொடங்கப்படவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள், 12 இதர பணியாளர்கள் பணியில் உள்ளனர். பணியாளர்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை. தூய்மை பணியாளர்கள் சிகிச்சைகள் நடக்கும் இடத்தில் உதவுவதற்கு வந்திருப்பதாக சொல்லப்பட்டிருந்தாலும் அவர்களைக் கொண்டு பணி என்பது தவறு என்கின்ற வகையில் சம்மந்தப்பட்ட மருத்துவர், செவிலியர் மற்றும் நிலைய கண்காணிப்பாளர் இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. குறிப்பாக, ஹெபிடேடஸ்-பி, பென்டாவலன்ட் தடுப்பூசி, மஞ்சள் காமாலை நோய்க்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.