ஏடிஜிபி ஜெயராமன் தொடர் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி மன்மோகன், 18 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். இப்படி உடனடியாக கைது செய்ய உத்தரவிடும் இத்தகைய அதிகாரம் இருப்பது எனக்கே தெரியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ் மற்றும் தேனியைச் சேர்ந்த பெண் விஜயஸ்ரீ இருவரும் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரத்தில் பெண்ணின் குடும்பத்தினர் தங்களின் பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்பி, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பெண்ணின் குடும்பத்தினர் இளைஞர் தனுஷின் சகோதரரை கடத்தினர். இதன்பின் சில மணி நேரங்களிலேயே சிறுவனை விட்டுவிட்டு சென்றனர். இதில் கடத்தலுக்கு பயன்படுத்தியது ஏடிஜிபி ஜெயராமனின் அரசு வாகனம் என்று தெரிய வந்தது.
இதுதொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தியை விசாரிக்க முயற்சித்தனர். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜரான நிலையில், உடனடியாக அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் பூவை ஜெகன் மூர்த்தியை விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தியது. தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமன் திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு சுமார் 20 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இதன்பின் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கைது நடவடிக்கையை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராமன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் உஜ்ஜால் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதிகள், சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியது.
தொடர்ந்து சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து தமிழக அரசின் ஆலோசனை பெற்று நாளை பதில் அளிக்க உத்தரவிட்டது. இதனிடையே நீதிபதி மன்மோகன், 18 ஆண்டுகளாக நானும் நீதிபதியாகவே இருக்கிறேன். கைது செய்ய உத்தரவிடும் இத்தகைய அதிகாரம் இருப்பது எனக்கே தெரியவில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.