அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம்.. ஆனால்: திருமாவளவன்!

அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் பிரச்சனை இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அது முடியாது என்று கூறியுள்ள திருமாவளவன், பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் நாங்கள் சேர மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருச்சியில் ஒரே ஹோட்டலில் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மற்றும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தங்கி இருந்தனர். இதில் திருமாவளவன் – வைகை செல்வன் சந்திப்பு நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. அதேபோல் திருமாவளவனை தொடர்ந்து நயினார் நாகேந்திரனையும், வைகை செல்வன் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் வைகை செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக கூட்டணியில் முதல் ஓட்டை விழுந்துவிட்டது என்று தெரிவித்தார். ஆனால் திருமாவளவன், அது வெறும் இலக்கிய சந்திப்பு என்று மட்டுமே விளக்கம் அளித்தார். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்திடம் இருந்து கூட்டணியில் இணையுமாறு விசிகவுக்கு அழைப்பு வந்தது. அதனை நிராகரித்த திருமாவளவன், திமுகவுடன் கூட்டணியில் தொடர்வதாக அறிவித்தார். அதேபோல் அதிமுக தலைவர்கள் பல்வேறு தருணங்களிலும் விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து நிராகரித்து வந்த திருமாவளவன், முதல்முறையாக அதிமுக தலைவர் ஒருவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் கூர்ந்து கவனிக்கப்படும் நிலையில், திருமாவளவன் நேற்றிரவு மதுரை வந்தார். அப்போது திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

அரசியலில் பொறுமை, நிதானம், தெளிவு மிகவும் முக்கியம். கொள்கை அடிப்படையில் நம் பகைவர்கள் யார் என்பதை தீர்மானிக்க ஒரு துணிவு இருக்க வேண்டும். விசிகவை பொறுத்தவரை கூட்டணி விவகாரத்தில் தெளிவாக உள்ளோம். எப்போதும் பாஜக மற்றும் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது. இதனை முன்பே தெளிவுபடுத்திவிட்டோம். அதேபோல் தமிழ்நாட்டில் திமுக மட்டுமல்லாமல் அதிமுகவோடு சேர்வதற்கும் விசிகவுக்கு கதவுகள் திறந்து இருக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அது முடியாது. பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியிலோ, அணியிலோ விசிக இணையாது.

இப்படி அனைத்து கதவுகளையும் மூடிவிட்டால், எப்படி கூட்டணி பேரம் பேசுவது என்று எல்லோரும் கேட்கிறார்கள். கூட்டணி பேரம் பேசுவதற்காக நாங்கள் கட்சியை நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.