வால்பாறையில் தாயின் கண்முன்னே 4 வயது சிறுமியை தூக்கிச் சென்ற சிறுத்தை!

கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள பச்சை மலை எஸ்டேட் பகுதியில் 4 வயது சிறுமியை தாயின் கண் முன்பே சிறுத்தை வனப் பகுதிக்குள் தூக்கிச் சென்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தலை மட்டும் மண்டை ஓட்டுடன் தனியாக மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடலை தேடும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, மாவட்டம், வால்பாறையில் தமிழக அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஏராளமான எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் காலம் காலமாக எஸ்டேட் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் பீகார், ஒடிசா, அசாம் என வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள எஸ்டேட்டுக்குச் சொந்தமான குடியிருப்பு பகுதிகளிலேயே இந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தை, கரடி , காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வால்பாறை, ரொட்டிக்கடை காவலர் குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை பிடிக்க வந்தபோது, வளர்ப்பு நாய் குரைத்து காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியது.

இந்நிலையில், வால்பாறையில் உள்ள பச்சை மலை எஸ்டேட் பகுதியில் 4 வயது சிறுமியை தாயின் கண் முன்பே சிறுத்தை வனப் பகுதிக்குள் தூக்கிச் சென்ற நிலையில், சிறுமியின் தலை மட்டும் மண்டை ஓட்டுடன் தனியாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடலை தேடும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வால்பாறை, பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியரும் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ரோஷிணி. குடியிருப்பு பகுதி அருகே ரோஷிணி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமியை தூக்கிச் சென்றது. இதனைப் பார்த்த சிறுமியின் தாய் அலறி அடித்துக்கொண்டு சப்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஓடி வந்து, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினரும் இணைந்து தேடும் பணயில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்க முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சிறுமியின் மண்டை ஓடு மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.