புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்களுக்கு எல்லாம் மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்த தாய் கலைஞர் கருணாநிதி. இந்த பெருமை மிகு வள்ளுவர் கோட்டத்தில் விழா நடக்கிறது. உங்களுக்கு நான் இருக்கிறேன். உங்களை முன்னேற்றுகிற ஆட்சி.. அதனால் தான் நான் இருக்கிறேன்.. சில வகுப்பு வாத சக்திகளுக்கும்,அவர்களுக்கு துணை போகிற கொத்தடிமை கூட்டத்தாலும் தாங்கி கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் ஒரு காலத்தில் சென்னையில் அடையாளமாக இருந்தது. இந்த வள்ளுவர் கோட்டம் திருவள்ளுவரின் நினைவாக 1974-1976 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அமைக்கப்பட்டது. இது திராவிட மற்றும் பல்லவர் கட்டிடக்கலை பாணியில், 5 ஏக்கர் பரப்பளவில் நினைவுச்சின்னமாக அமைக்ககப்பட்டிருந்தது. சினிமா படங்களில் சென்னையை காட்டுவதற்கு எப்படி ஜெமினி மேம்பாலத்தை (அண்ணா மேம்பாலம்) காட்டுவார்களோ, அதுபோல் வள்ளுவர் கோட்டத்தை காட்டுவார்கள். பூங்காவுடன் இருந்த வள்ளுவர் கோட்டம் வேலை தேடி வந்த பலருக்கு புகழிடமாக ஒரு காலத்தில் இருந்தது. சென்னையில் வேலை தேடி அலையும் பலர் வள்ளுவர் கோட்டத்தில் ஓய்வெடுத்த காலமும் உண்டு. சென்னைக்கு சுற்றுலா வரும் பயணிகள் வள்ளுவர் கோட்டத்தை பார்க்காமல் போக மாட்டார்கள். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வள்ளுவர் கோட்டம் இருந்து வந்தது. ஆனால் 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்திருந்ததாக வள்ளுவர் கோட்டம் மாறியிருந்தது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. பணிகள் நிறைடைந்த நிலையில், வள்ளுவர் கோட்டம் புதிய பொலிவு பெற்றுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். வள்ளுவர் கோட்டத்தில், அய்யன் வள்ளுவர் கலையரங்கத்தை பொறுத்தவரை 1,548 இருக்கைகளுடன் அதிநவீன ஏர் கண்டிஷனர் வசதி செய்து உருவாக்கப்பட்டுள்ளது, குறள் மணிமாடத்தில் 1,330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. 100 பேர் அமரக்கூடிய ஆராய்ச்சி மையமும் இருக்கிறது. மல்டி-லெவல் பார்க்கிங்கை பொறுத்தவரை ஒரே நேரத்தில் 164 வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவகம் மற்றும் ஒலி-ஒளி காட்சிக்கூடம் உள்ளிட்ட புதிய வசதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
மிகவும் அற்புதமாக மாற்றப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த நிலையில், உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அய்யன் வள்ளுவர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
இன்று எனக்கு உணர்ச்சி பூர்வமான நாள், இந்த விழாவிற்காக மட்டுமல்ல. எந்த இடத்திற்காகவும் நான் உணர்ச்சி வசப்படுகிறேன். உங்களுக்கு எல்லாம் மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்த தாய் கலைஞர் கருணாநிதி. இந்த பெருமை மிகு வள்ளுவர் கோட்டத்தில் விழா நடக்கிறது. நீங்கள் எல்லாம் பாராட்டு விழா நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு நான் இருக்கிறேன். எல்லோருக்குமான ஆட்சி, உங்களை முன்னேற்றுகிற ஆட்சி.. அதனால் தான் நான் இருக்கிறேன்.. சில வகுப்பு வாத சக்திகளுக்கும், அவர்களுக்கு துணை போகிற கொத்தடிமை கூட்டத்தாலும் தாங்கி கொள்ள முடியவில்லை.. எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை,.. அதனை எல்லாம் அரசியல் களத்தில் முறியடிக்கக்கூடிய வலிமையை தருவது நீங்களும் மக்களும் தான். இவ்வாறு அவர் கூறினார்.
