மதுரையில் நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக மாநாடு அல்ல, அரசியல் மாநாடு என சொல்வது காமெடியாக இருக்கிறது. சங்கி என ஏன் சொல்கிறீர்கள் என இயக்குநர் அமீருக்கு நடிகர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த நடிகர் ரஞ்சித் கூறியிருப்பதாவது:-
இதுவரை தமிழகத்தில் உள்ள முருகன் சன்னதிகளை தனித்தனியாக பார்த்திருக்கிறோம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு அறுபடை வீட்டையே நம் கண் முன்னால் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். இதை பார்ப்பதற்கே ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. தமிழ் கடவுள் முருகன். இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதிலும் மக்களோடு மக்களாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி! தினமும் லட்சோப லட்சம் மக்கள் கலந்து கொள்கிறார்கள். ஒரு பிறவி பயனை அடைந்தது போல் இருக்கிறது.
முருக பக்தர்கள் மாநாட்டை நாம் அரசியலாக பார்க்க முடியாது. இந்த விழாவுக்கு வந்த பக்தர்கள் எல்லாருமே ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? தமிழகத்திற்கு வாக்களித்த எத்தனையோ பேர் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என சொல்ல முடியுமா? நமக்கு அரசியல் வேறயாக இருக்கலாம். ஆனால் கடவுள் என்பவர் பொதுதானே! பொதுவான கடவுளை கும்பிடுவதற்கு இத்தனை பேர் வந்திருக்கிறார்கள். அதற்கு போய் சிலர் வாக்கு வங்கி என்கிறார்கள், சிலர் இது ஆன்மீக மாநாடு இல்லை, அரசியல் மாநாடு என்கிறார்கள். இதெல்லாம் வேதனைக்குரிய விஷயம், நகைப்புக்குரிய விஷயம்!
சங்கி என சொன்னாலே எனக்கு கோபம் வருகிறது. சங்கி என்றால் என்ன? இந்துக்களை சங்கி என சொல்வதால் என்ன வர போகிறது. சங்கின்னு சொல்வதில் என்ன சந்தோஷம் இருக்கிறது. இந்து மதம் என்பது மிகப்பெரிய மார்க்கம். இந்தியாவில் இந்து மதத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மதத்தை காயப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு இவர்கள் சொல்லும் வார்த்தைகள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நான் கூட அந்த பேட்டியை பார்த்தேன். அந்த இயக்குநர் அமீர், நல்ல பண்பானவர். ஆனால் அந்த வார்த்தையை சொல்லியிருக்கக் கூடாது. அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர். அதற்காக நாம் அவருடைய மதத்தில் போய் கருத்து சொல்கிறோமா. எத்தனையோ ரம்ஜான் விழாவுக்கும் புனித வெள்ளி விழாவிற்கும் நான் போயிருக்கிறேன். இப்தார் நோன்பு திறக்கும் போது அரசியல் தலைவர்கள் குல்லா அணிந்து கொள்கிறார்கள். இதற்காக நாம் போராட்டமா நடத்தினோம். ஆனால் நாம் செய்வதை அரசியலாக்குவது அநாகரீகமான செயல்.
இறைவனுக்கு பரம்பொருள் ஒன்றுதான். அதற்கு வடிவங்கள் வேறு, வழிபாட்டு முறைகள் வேறு! எனவே எந்த மதத்தினரையும் காயப்படுத்த வேண்டாம். அது போன்ற வார்த்தைகளை நாம் வெளியே விடக் கூடாது. அது அடுத்த தலைமுறைக்கு நல்லதல்ல. மக்களும் இவர்கள் பேசும் அநாகரீக பேச்சுக்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இப்படி பேசுவதால் நாளுக்கு நாள் ஒற்றுமை அதிகமாகி ஜாதி மத பேதமில்லாமல் மக்கள் வெள்ளத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
