முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:-
தமிழகத்தின் ஆன்மீக வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இன்று அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முருக பக்தர்கள் மாநாடு இன்று மாலை 3 மணிக்கு மதுரையில் நடைபெறவுள்ளது.
பல லட்சம் மக்கள் இன்று ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட உள்ளனர். இந்த புனிதத் தருணத்தில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டுகிறேன். இது ஒரு கட்சி சார்ந்த மாநாடு அல்ல என்றும் அனைத்துத் தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு.
இந்த மண் ஆன்மீக மண் என்பதை உலகுக்கு இது நன்றாக நிரூபிக்கிறது. முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?. வேறு மதங்கள் இப்படி ஒன்று சேர்ந்தால் எதிர்ப்பு தெரிவிக்கத் துணிவார்களா?. மாநாட்டிற்கு காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லை. உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், தேவையான ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
