ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சை மோடி அரசு கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அரசாங்கம் தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
ஈரான் மீது அமெரிக்க விமானப்படையை கட்டவிழ்த்து விட அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவு, ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்ற அவரது தனிப்பட்ட கருத்தை கேலி செய்வதாகும்.
ஈரானுடன் உடனடியாக ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியம் என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. இந்திய அரசாங்கம் இதுவரை இருந்ததை விட அதிக தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அமெரிக்காவின் குண்டுவீச்சு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் ஆகியவை குறித்து மோடி அரசாங்கம் விமர்சிக்கவோ அல்லது கண்டிக்கவோ இல்லை. காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும் அது கடுமையான மவுனத்தைக் கடைபிடித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் படையின் பி-2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்கள் நேற்று அதிகாலை ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை குறிவைத்து ஜிபியு-57 பங்கர் ரக வெடிகுண்டுகளை வீசின. ஒவ்வொரு விமானமும் தலா 2 குண்டுகள் என மொத்தம் 14 குண்டுகளை வீசின. இவை 90 மீட்டர் ஆழத்துக்கு பூமியை துளைத்துச் சென்று, வெடித்துச் சிதறின. இதில், போர்டோ அணுசக்தி தளம் முற்றிலுமாக சேதமடைந்தது.
ஈரானின் நடான்ஸ், இஸ்பகான் நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள் மீதும் பி-2 போர் விமானங்கள், ஜிபியு-57 பங்கர் வெடிகுண்டுகளை வீசின. அதேநேரம், சுமார் 400 மைல் தூரத்தில் கடலுக்கு அடியில் முகாமிட்டிருந்த அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து 30 டோமஹாக் ரக ஏவுகணைகள் சீறி பாய்ந்தன. இந்த ஏவுகணைகளும் நடான்ஸ், இஸ்பகான் அணுசக்தி தளங்களை அடுத்தடுத்து தாக்கின. அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கிகளின் தாக்குதல்களால் ஈரானின் 3 அணுசக்தி தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
