சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்பவர் காவல் நிலைய அதிகாரி அவனப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவாகரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வானமாமலை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் காவல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, வெள்ளை சட்டை அணிந்து வந்தால்தான் மரியாதை தருவீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு நடந்நதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டை எழுப்பிய குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர், அவரை அவமானப்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் குழுவில் சாதி ரீதியிலான கருத்துகளை பதிவு செய்திருந்தாராம். இது அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களிடையே பரவியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தன்னை சாதி ரீதியாக பதிவிட்டவர் குறித்து சென்னை நொளம்பூர் காவல் நிலையத்துக்கு சென்று வானமமாமலை புகார் அளித்துள்ளார். அப்போது புகார் அளிக்க சென்ற போது, குடியிருப்பு உரிமையாளர் வானமாமலையை நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நொளம்பூர் காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானமாமலை தேசிய பட்டியலின ஆணையத்துக்கு மனு அனுப்பியிருக்கிறார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்னை காவல்துறைக்கு ஆணையம் உத்தரபு பிறப்பித்தது.
இந்த நிலையில் தேசிய பட்டியலின ஆணையத்தின் அறிவிப்பின் அடிப்படையில் நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வானமாமலை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்திருக்கிறது.
அப்போது காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியிருந்தது. அப்போது குறுக்கிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், “மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட புலன் விசாரணை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என கேள்வியினை காவல்துறையை நோக்கி எழுப்பினார்.
மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கூறுகையில், “காவல் ஆய்வாளர் முன்பு அமர்வதற்கு புகார்தாரருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் வெள்ளை சட்டையுடன் வந்தால்தான் சிவப்பு கம்பள வரவேற்பு தருவீர்களா? அழுக்கு சட்டையுடன் வந்தால் புகாரை ஏற்கமாட்டீர்களா? அவர்கள் வாக்களித்தால் அந்த வாக்கை எண்ண மாட்டீர்களா? மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு, நீங்கள் சொல்பவர்தான் இருக்கையில் அமர வேண்டுமா? மற்றவர்கள் அமரக்கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார்? அரசு அலுவலகம் அனைத்து மக்களுக்குமானது” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கின் விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
