ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வது ஏன்?: பாஜக!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி கடந்த வாரம் ரகசிய வெளிநாட்டு பயணத்தில் இருந்தார். இப்போது அவர் மீண்டும் வெளிநாடு சென்று, மற்றொரு வெளிப்படுத்தப்படாத இடத்துக்கு சென்றுள்ளார். அவர் இவ்வாறு அடிக்கடி ரகசியப் பயணம் செல்வது ஏன்? அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு அவரை கட்டாயப்படுத்துவது எது? எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் மக்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பக்ரைன் சென்றுள்ளதாக சமூக ஊடகங்கள் ஊகித்திருந்த நிலையில் அவர் பக்ரைன் வழியாக லண்டன் சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “பிரதமர் அலுவலகம் வழக்கம்போல, அதன் மோசமான தந்திரங்களை செய்கிறது. அதற்கு வேறு எதுவும் தெரியாது. ராகுல் காந்தி தனது மருமகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் சென்றுள்ளார். விரைவில் நாடு திரும்புவார்” என்று கூறியுள்ளார். பிரியங்கா காந்தியின் மகள் மிராயா வதேரா இங்கிலாந்தில் படித்து வந்தார். அவர் இளநிலை பட்டம் பட்டம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.