முஸ்லீம் மாணவரின் தாடியை அகற்ற சொன்ன கோவை மருத்துவ கல்லூரி!

கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாடியை எடுக்குமாறு கூறியதால், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த முஸ்லீம் மருத்துவர் படிப்பில் சேராமல் சென்றுள்ளார். மருத்துவமனையின் கொள்கை மத சுதந்திரத்தை மீறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ், எம்.டி முடித்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர், சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வில் வெற்றி பெற்று, கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உயர் படிப்புக்காக சிறுநீரகவியல் (நெப்ராலஜி) துறையை தேர்வு செய்துள்ளார். கலந்தாய்வு நடைமுறைகளுக்குப் பிறகு ரூ.2 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் தொகையைச் செலுத்தி, கல்லூரியில் சேரச் சென்றுள்ளார். அப்போது அவரிடம், தாடியை ஷேவ் செய்யுமாறும், இது கல்லூரியின் விதிமுறையாக கடைபிடிக்கப்படுவதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இஸ்லாமிய நடைமுறைகளின்படியே தான் தாடி வைத்திருப்பதாகவும், இப்படித்தான் இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்திருப்பதாகவும் அந்த மாணவர் கூறியுள்ளார். ஆனால், கட்டாயம் தாடியை அகற்ற வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அவர் படிப்பைத் தொடர முடியாமல் ஜம்மு காஷ்மீருக்கு திரும்பி உள்ளார்.

இது தொடர்பாக அங்கு ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தில் தெரியப்படுத்தி உள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் நசிர் குவஹாமி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவு வழங்கும் தனிநபருக்கான மத சுதந்திரம் தமிழ்நாட்டில் பறிக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கும், கலாசார பன்முகத்தன்மைக்கும் பெயர் பெற்ற ஒரு மாநிலத்தில் இப்படியான செயல் நடைபெற்றிருப்பது வருத்தம் அளிக்கிறது. மருத்துவ மாணவரின் மத சுதந்திரத்தையும், அடிப்படை உரிமைகளையும் பறிக்கும்படியாக அமைந்த இந்த செயல் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரித்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், கல்லூரியில் சேருவதற்காக வந்த காஷ்மீர் மாணவரிடம் தங்களுடைய மருத்துவமனை விதிமுறைப்படி தாடி வைக்க அனுமதி இல்லை என்றும், வேண்டுமென்றால் தாடியை ட்ரிம் செய்து கொள்ளுங்கள் எனக் கூறினோம். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. நெப்ராலஜி துறை என்பது மிக முக்கியமான துறை, அறுவை சிகிச்சைகள் அதிகமாக செய்ய வேண்டியிருக்கும். எனவேதான், தாடியை ட்ரிம் செய்ய வலியுறுத்தினோம். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டு சென்று விட்டார். எங்கள் மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களும், பேராசிரியர்களும் அந்த மாணவருக்கு அறிவுரை கூறியும் அவர் ஏற்காமல் சென்று விட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேசிய மருத்துவ ஆணையத்திலும் அந்த மருத்துவ மாணவர் புகார் அளித்துள்ளார். “நான் இஸ்லாமிய நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறேன், தாடி வைத்திருப்பது எனது நம்பிக்கையின் ஒரு பகுதி. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அரசியலமைப்புச் சட்டம் எனது மதத்தைப் பின்பற்றுவதற்கு எனக்கு சுதந்திரம் அளிக்கிறது. முகத்தில் உள்ள முடி சுகாதாரத்தை பாதிக்காதபோது எனது மருத்துவப் பயிற்சி அல்லது நோயாளிகளை கவனிப்பதை எந்த வகையில் பாதிக்கும்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.