திருப்பரங்குன்றம் மலையின் மீது இருக்கும் சிக்கந்தர் தர்கா குறித்து, இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாட்டில் போடப்பட்டிருக்கும் தீர்மானம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத வெறுப்பை உருவாக்கும் இந்து முன்னணி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தொடர்பான பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் நிலவி வருகின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் இந்து முன்னணி சார்பில் ‘முருக பக்தர்கள்’ என்கிற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில், “குன்றம் குமரனுக்கே சொந்தம் என்பதால், திருப்பரங்குன்றம் மலையை ‘சிக்கந்தர் மலை’ என்று அழைப்பதைத் தவிர்த்து, முருகனுக்குச் சொந்தமான மலைகளைப் பாதுகாக்க வேண்டும்” என்பது உட்பட மொத்தம் 6 தீர்மானங்கள் போடப்பட்டிருந்தன. இதில் சிக்கந்தர் மலை என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்றி தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இது குறித்து பேசிய சு.வெங்கடேசன் கூறியதாவது:-
மலைக்கு மேலே இருப்பது சிக்கந்தர் தர்கா அல்ல. சிக்கந்தர் தர்கா கோரிப்பாளையத்தில் இருக்கிறது. இது சிக்கந்தர் அல்ல என்று இந்து முன்னணி மாநாட்டிலே அதிகாரப்பூர்வ தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. ஒரு மத வழிபாட்டு சின்னத்தை, அதை அதற்குரிய சின்னம் இல்லை என்று மதப் பழமைவாத, மத வெறுப்பை ஏற்படும் வகையில் வெளிப்படையாக உருவாக்குகிற ஒரு தீர்மானம் போடப்பட்டு நான்கு நாட்கள் ஆகிறது. ஆனால் இன்றைக்கு வரை மதுரை, தமிழ்நாடு காவல்துறை அவதூறு பரப்பியவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? என்று கேள்வி எழுப்ப விரும்புகிறோம்.
சுமார் 400-500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு தர்காவை, அது தர்காவே இல்லை என்று தீர்மானம் போடப்படுகிறது எனில், வெளிப்படையாக இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமைகள் மீது மோதலை உருவாக்கும் வகையில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? இப்படி தீர்மானம் போடப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் தமிழ்நாடு காவல்துறை ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது? என் வழக்கு பதிவு செய்ய உங்களுக்கு தெரியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்திருந்தது. ஆனால், நீதிமன்றத்திற்கு சென்னு இந்து முன்னணி அனுமதி வாங்கி வந்தது. அனுமதியளிப்பதற்கு முன்னர் நீதிமன்றம் 52 நிபந்தனைகளை விதித்திருந்தது. அதில் மிக முக்கியமானது, ஆன்மீக மாநட்டில் அரசியலை முன்னெடுத்து பேச கூடாது, மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலோ, அல்லது மற்ற மதங்களை இழிவுப்படுத்தும் வகையிலோ பேசக்கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், “வரும் தேர்தல்களில் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்” என்றும், “குன்றம் குமரனுக்கே சொந்தம் என்பதால், திருப்பரங்குன்றம் மலையை ‘சிக்கந்தர் மலை’ என்று அழைப்பதைத் தவிர்த்து, முருகனுக்குச் சொந்தமான மலைகளைப் பாதுகாக்க வேண்டும்” என்றும் தீர்மானம் போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
