மொழியின் பெயரால் வன்முறை கூடாது: தேவேந்திர பட்னவீஸ்!

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் எச்சரித்துள்ளார். மேலும், மராத்தி மொழியின் பெருமைக்கான வன்முறையில் ஈடுபடுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மும்பைக்கு அருகிலுள்ள மீரா சாலையில் ஒரு கடைக்காரர் மராத்தியில் பேசுவது ஏன் கட்டாயம் என்று கேள்வி எழுப்பியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனை தொண்டர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினர்.
மகாராஷ்டிரம் பல மொழிகளின் தாயகமாக இருப்பதாக அந்தக் கடைக்காரர் கூறியதால் அவரை ஏழு பேர் கொண்ட கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. அவரைத் தாக்கியது மட்டுமின்றி, அவர் இனிமேல் தொழில் நடத்தவும் கூடாது எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த நிலையில், உள்துறையை நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மகாராஷ்டிர முதல்வர் பட்னவீஸ், இந்த வழக்கில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதை உறுதிப்படுத்தினார். மொழி சார்ந்த விஷயங்களில் சர்ச்சைகளை உருவாக்கும் எவருக்கும் எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சில நேரங்களில் இந்த மனிதர்கள் ஆங்கிலத்தை உயர்வான மொழியாகவும், ஹிந்தியைத் தாழ்வான மொழியாகவும் கருதுகின்றனர். இது என்ன மாதிரியான மனநிலை எனத் தெரியவில்லை. ஒருவரின் தாய் மொழியை அடுத்தவர் எதிரான வன்முறையாக மாற்றக் கூடாது. அவ்வாறு நடந்துகொண்டால் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.