மதுரை மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு நிலவிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் பதவி விலகும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர்கள் பதவி விலகினர். இந்த நிலையில் 5 பேரின் ராஜினாமா ஏற்கப்படுவதாக மதுரை மேயர் இந்திராணி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகராட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் 1480 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்தனர். அதில், குறிப்பாக 370 கோடி ரூபாய் சொத்து வரி என கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டதால் கூடுதலாக 250 கோடி அளவில் கிடைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறினர். தற்போதைய நிலவரப்படி, மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் சொத்து வரி கட்டும் கட்டிடங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கு மேல் வணிக கட்டிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கடந்த 2022 முதல் வணிக நிறுவன கட்டடங்களுக்கு, குடியிருப்பு கட்டிடங்களின் வரியை நிர்ணயம் செய்யப்பட்டு மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது என அதிமுக குற்றம் சாட்டியது.
மேலும் இந்த ஊழல் தொடர்பாக நெருக்கடி அதிகமான நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், மண்டலம் மூன்றின் தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் ஆய்வாளரான குமரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன், ராஜேஷ் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதில் திமுக மண்டல தலைவர்கள் மீதும் சந்தேகம் எழுந்தது. இதை அடுத்து மண்டலம் மூன்றின் தலைவர் பாண்டிச்செல்வி, மண்டலம் இரண்டின் தலைவி சரவண புவனேஸ்வரி, மண்டலம் ஐந்தின் தலைவி சுவிதா ஆகியோரிடமும் அவரது கணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மதுரைக்கு வந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேரு மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் மேயர் இந்திராணி, திமுக மண்டல தலைவர்களான பாண்டி செல்வி, சரவணபவனேஸ்வரி, சுவிதா, முகேஷ் சர்மா, நகரமைப்பு வரி விதிப்பு குழு தலைவர்கள் ஆன மூவேந்திரன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஒன் டு ஒன் என்ற பெயரில் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த நிலையில் தவறு செய்த யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து அவரது கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும் அதிமுக நாளை மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்த நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். புகாருக்குள்ளான அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வற்புறுத்தியதாக சொல்லப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டல தலைவர்களும், 2 குழு தலைவர்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இந்த நிலையில் 5 மண்டல தலைவர்கள் இரண்டு நிலை குழு தலைவர்கள் ராஜினாமா கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், காலியான மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர் பதவிகளுக்கு புதிய நியமனம் நடைபெறுமா அல்லது தற்போதைய நிலையே தொடருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
