மக்களவையில் பேச அனுமதி மறுக்கிறார்கள்: ராகுல் காந்தி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேச அனுமதி மறுக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. மொத்தம் 8 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விஷயங்களை எழுப்ப திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அவை தொடங்கிய முதல் நாளே, எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்று புகார் எழுந்திருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, “பாதுகாப்பு அமைச்சரும், ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்களும் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சியில் இருந்து யாராவது பேச விரும்பினால், அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது ஒரு புதிய அணுகுமுறை” என்று விமர்சித்திருக்கிறார்.

மற்ற எம்பிக்கள் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பேசும்போது, அரசு தரப்பிலிருந்தும் கருத்து தெரிவிக்க இடம் அளிக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தினோம். இரண்டொரு வார்த்தைகள் கூட பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானத்தை தொடர்ந்து, இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

கேள்வி நேரம் முடிந்ததும் ஆபரேஷன் சிந்துார் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் எழுப்ப உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். ஆனாலும், அவை விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் மட்டுமே செயல்படும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். கோஷம் எழுப்புவது மற்றும் பதாகைகளுக்கு அனுமதி இல்லை எனவும் அவர் கூறினார்.

உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தால், அனைத்து பிரச்சினைகளையும் எழுப்ப அனுமதிப்பதாகவும், ஒவ்வொரு எம்பிக்கும் போதுமான நேரம் ஒதுக்கப்படும் என்றும் பிர்லா உறுதியளித்தார். ஆனால் பேச அனுமதிக்கவில்லை” என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் விமர்சித்திருக்கின்றன.