அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதல்வரின் புகைப்படத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல்வர் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது.
அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல, ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது எனத் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்த கூடாது எனவும், அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல்படுத்துவதற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.
அதேசமயம், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அளித்த புகாரை தேர்தல் தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என தெளிவுபடுத்தி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
