வீணாக கடலில் கலக்கும் நீரை பாசனத்திற்கு திருப்பிவிட வேண்டும்: டி.டி.வி.தினகரன்!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை ஆறு, குளங்களில் சேமித்து பாசனத்திற்கு திருப்பிவிடத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை கடைமடைப் பகுதிக்கு வரவில்லை என தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தங்களின் வேதனையை பதிவு செய்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

மேட்டூர் அணையை திறக்கும் முன்பு காவிரி டெல்டா பகுதிகளின் கிளை ஆறுகளையும், கால்வாய்களையும் தூர்வார விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தூர்வாராததால் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை ஆறு, குளங்களில் சேமித்து பாசனத்திற்கு திருப்பிவிடத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.