டெல்லியில் நடைப்பயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எம்பிக்கள் இருக்கும் பகுதியான சாணக்கியபுரியிலேயே பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக எம்பி சுதா குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து எம்பிக்கள் டெல்லி வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதிகளில் தங்கியுள்ளனர். தங்களது தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து விவாத நேரத்தில் முன் வைத்தும் வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லியில் மயிலாடுதுறை எம்பி சுதா தங்கியுள்ளார். அவர் தினமும் சாணக்கியபுரி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் சாணக்கியபுரியில் உள்ள போலந்து நாட்டின் இந்திய தூதரக அலுவலகத்திற்கு வெளியே திமுக ராஜ்யசபா எம்பி ராஜாத்தி சல்மாவுடன், சுதா எம்பி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், சுதாவின் கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சாணக்கியபுரி போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் மர்மநபரை தேடி வருகிறார்கள்.
இதனிடையே தனது தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, சுதா எம்பி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, சுதா எழுதிய கடிதத்தில், “காலை 6.15 மணி முதல் 6.20 மணி இருக்கும், நானும் சல்மாவும் போலந்து நாட்டின் இந்திய தூதரக அலுவலகத்திற்கு வெளியே நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அப்போது கேட் 3, கேட் 4 பகுதியில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் (பெண்கள் ஓட்டும் பைக்) அவரது முகத்தை முழுவதும் மறைத்தது போல் ஹெல்மெட் அணிந்து கொண்டு எங்களை நோக்கி எதிர்திசையில் வந்தார். அவர் சங்கிலி பறிக்க வந்திருக்கிறார் என எங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. அப்போது என் அருகே வந்த அவர் மெதுவாக வந்து என் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றார். அவர் செயினை வேகமாக பறித்ததால் என் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உயர் பாதுகாப்பு பகுதியில் ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடியாது என்றால் வேறு எங்கு நாங்கள் பாதுகாப்பாக உணர்வது? நாள்தோறும் எங்கள் பொருட்கள், உயிர் மீது அச்சத்துடனேயே தினசரி பணிகளை செய்ய வேண்டுமா? உயர் பாதுகாப்பு பகுதியில் ஒரு எம்பியிடம் இருந்து செயின் பறித்துச் சென்ற சம்பவம் அங்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதையே காட்டுகிறது. என் கழுத்தில் இருந்து செயின் பறித்துச் சென்ற அதிர்ச்சியிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. அந்த நபர் யார் என்று கண்டுபிடித்து அவரை கைது செய்ய வேண்டும் என சுதா, அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
