திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி எண் பெற இடைக்கால தடை விதித்திருந்தது சென்னை ஐகோர்ட். ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. திமுகவின் மேல்முறையீட்டு மனுவை இன்று தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ஆளுங்கட்சியான திமுக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் அனைத்து வீடுகளுக்கும் சென்று, வீட்டில் இருப்பவர்களிடம் பல்வேறு ஆவணங்களைக் கேட்டு துன்புறுத்துகின்றனர். அனுமதி பெறாமல் வீட்டில் முதல்வர் படத்துடன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஒட்டுகின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளைக் கேட்கின்றனர். அந்த ஆவணங்களைத் தர மறுத்த பெண்களிடம், மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாயை நிறுத்திவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் தனிப்பட்ட செல்போன் எண்களைப் பெற்று பதிவு செய்தனர். செல்போனுக்கு வந்த ஓடிபி (OTP) கேட்டுப் பெற்று திமுக உறுப்பினர்களாகச் சேர்க்கின்றனர் எனத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அரசியல் காரணங்களுக்காக ஒருவரின் அனுமதியில்லாமல் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது குற்றச்செயல். எனவே, பொதுமக்களிடமும் இருந்து ஆதார் விவரங்களை திமுகவினர் சேகரிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும், எந்த காரணத்துக்காகவும் ஆதார் விவரங்களைச் சேகரிக்கக் கூடாது என்றும், இதுவரை சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விவரங்களை உடனடியாக அழிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.
இந்த மனு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஓடிபி விபரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என போலீசார் பொதுமக்களை எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக ஏன் ஓடிபி எண் கேட்க வேண்டும்? ஆதார் விவரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றால் என்ன செய்வது? இந்திய மக்கள் இவ்வாறுதான் கையாளப்படுவார்களா?
கட்சிகள் உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் நடத்துவதில் தவறில்லை. அப்போது பெறப்படும் தனிப்பட்ட தகவல்கள் எப்படி கையாளப்படும், எப்படி பாதுகாக்கப்படும், எவ்வாறு அழிக்கப்படும் என்பது தொடர்பான உறுதியான எந்த திட்டமும், விவரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இது மிகவும் ஆபத்தானது. தனிநபர் விபரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெறும் உறுப்பினர் சேர்ப்பு பணியில் தனிநபர் விவரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களின் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். எனவே திமுகவினர் நடத்தி வரும் உறுப்பினர் சேர்க்கையின்போது பொதுமக்களிடம் ஓடிபி எண் பெற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதேநேரத்தில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம்” என உத்தரவிட்டது.
இதையடுத்து, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், “ஓடிபி பெறும் விவகாரத்தில் பொதுமக்களிடம் எந்தவித வற்புறுத்தலும் செய்யப்படவில்லை. அவர்கள் தானாகவே தங்களுடைய சுய விருப்பத்தின் பேரில் தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டு வருகின்றனர். ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்.” என்று கோரப்பட்டது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஆதார் விவரங்களை மக்களிடம் இருந்து கட்சி சேகரிக்கவில்லை என்று அறிக்கை சமர்பித்தார். பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி போன்ற பிற கட்சிகள் செய்வதையே நாங்களும் செய்வதாக கூறிய அவர், இந்த விஷயத்தில் எந்த தடையும் கோரப்படாததால் ஐகோர்ட் தவறாக உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்றும் அவர் வாதிட்டார்.
இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக பேசிய நீதிபதிகள், “இந்தப் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்தது. முழு செயல்முறையும் சந்தேகத்திற்குரியது. நீதிமன்றம் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் உயர்நீதிமன்றத்தையே நாடுங்கள். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
