தமிழ்நாடு – இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு – இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா.. அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி. இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி. இரண்டுமே கழக ஆட்சி.

2030-ஆம் ஆண்டுக்குள் One Trillion Dollar பொருளாதாரம் என்ற போது பலரது புருவமும் உயர்ந்தது. “இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?” என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666). இவ்வாறு அவர் கூறியுள்ளார்.