குப்பைக்கழிவுகளால் நிரம்பி வழிவது தலைநகரம் மட்டுமல்ல, இந்த ஆட்சியாளர்களின் எண்ணமும் செயலும் தான் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம்தமிழர் கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
பணி நிரந்தரம் கோரியும், தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் அறவழிப்போராட்டத்தினைக் காவல்துறையை ஏவி கலைக்கும் விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்கிற தகவல் வெளிவரும் நிலையில், களத்தில் போராட்டக்காரர்களுக்கு அரணாக நாம் தமிழர் கட்சி நிற்கும் என்று தமிழ்நாடு அரசுக்கும், அதன் காவல்துறைக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
எவ்வித இடையூறுமின்றி அமைதி வழியில் போராடும் தூய்மைப்பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையினைக் கூட கேட்டறிந்து செயல்படுத்த முன்வராமல், அவர்களின் போராட்டத்தினை கலைத்திட அரசு முனையுமானால் குப்பைக்கழிவுகளால் நிரம்பி வழிவது தலைநகரம் மட்டுமல்ல, இந்த ஆட்சியாளர்களின் எண்ணமும் செயலும் தான். எவ்வித எதேச்சாதிகாரப் போக்கினையும் பின்பற்றிடாமல், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கானப் பணி நிரந்தரம் மற்றும் இதர கோரிக்கைகள் குறித்த நடவடிக்கைகளைக் காலம் தாழ்த்தாது முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். அதற்கு மாறான அரசின் கொடுங்கோன்மைப் போக்கு எதுவாயினும் போராடும் மக்களோடு சேர்ந்து, நாம் தமிழர் கட்சியும் பெரும் அளவிலானத் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
