“தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தியதும், அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதும் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தப் போராட்டம் பற்றியோ, அவர்களின் கோரிக்கைகள் பற்றியோ எதுவுமே குறிப்பிடாமல், “தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று முதல்வர் கூறியுள்ளது விவாதப் பொருளாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் கூறியுள்ளதாவது:-
நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. 4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத் திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,
* தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
* தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
* தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
* தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
* பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி
தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத் திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம். இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
