விஜய் கொடியேற்ற இருந்த 100 அடி கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு!

மதுரை மாநாட்டின் தொடக்கமாக விஜய் கொடியேற்ற இருந்த 100 அடி கம்பம் திடீரென கீழே விழுந்ததால் தவெகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை (21-08-25) நடைபெற இருக்கிறது. மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் சுமார் 506 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு தவெக கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் நேற்றே மதுரைக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், மாநாட்டின் தொடக்கமாக விஜய் கொடியேற்ற இருந்த 100 அடி கம்பம் திடீரென கீழே விழுந்ததால் தவெகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாளைய தவெக மாநாட்டில் விஜய் கொடியேற்ற ஏதுவாக 100 அடி கொடிக்கம்பம் நடும்பணி இன்று தீவிரமாக நடைபெற்றது. கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முற்பட்ட போது திடீரென கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. மேலும், 100 அடி கொடிக்கம்பம் கீழே சாய்ந்து கார் மீது விழுந்ததில் அங்கிருந்த தவெகவினர் பதறி அடித்து ஓடினர்.

30 டன் எடையை கையாளும் திறன் கொண்ட கிரேன் இருந்தும் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கார் மீது விழுந்த தவெக கொடிக்கம்பம் சுமார் 10 டன் எடை கொண்டதாகவும், நட் போல்டுகளை சரியாக பொருத்தாததாலும் கொடிக்கம்பம் கீழே விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தின் ட்ரோன் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பலர் நூலிழையில் உயிர்த் தப்பிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து தவெக நிர்வாகி நிர்மல் குமார் கூறியதாவது:-

எல்லாவித பாதுகாப்பு ஏற்பாடுடன் கொடிக் கம்பம் நடும் பணி நடைபெற்று வந்தது. அதில் கிரேனுடைய பெல்ட் கொஞ்சம் பிடிமானம் தாங்காமல் விழுந்ததால் கொடிக் கம்பம் சாய்ந்து விட்டது. இந்த கொடிக் கம்பம் நடுகின்ற பணி இருப்பதால்தான் காலையில் இருந்து பொதுமக்களை யாரையும் அனுமதிக்கவில்லை. அதிகபாரம் உள்ள கொடிக்கம்பம் என்பதால் யாரையும் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி பார்க்க வேண்டும் என நிறைய பேர் வந்தார்கள். அதைத்தவிர்த்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அடுத்த கட்டமாக அதை எடுத்து நகற்றிவிட்டோம்.

இவ்வளவு பெரிய மாநாட்டில், இவ்வளவு பெரிய அரங்கில் இது ஒரு சின்ன விபத்து. 250 ஏக்கரில் மாநாடு பணி செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை எதிர்பார்த்து வருகிறோம். அனைத்து விஷயத்தையும் விஜய் கேட்டறிந்து வருகிறார். பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வேண்டும் என்பதற்காக தண்ணீர் பைப் மட்டும் 8,000 மீட்டருக்கு நடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் அடிப்படை வசதிகள் பார்த்து பார்த்து தயார் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண விபத்து பெரிதுபடுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல் குளத்தில் தவெக மாநாட்டிற்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காகக் கம்பி எடுத்து வந்தபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாமகரிசல் குளத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் காளீஸ்வரன்(19). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விஜய் ரசிகரான காளீஸ்வரன், ஆகஸ்ட் 21-ம் தேதி மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழக 2-வது மாநில மாநாட்டிற்காக பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக தனது நண்பருடன் சேர்ந்து இரும்பு கம்பி எடுக்கச் சென்று உள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையிலிருந்து இரும்பு கம்பியை எடுத்து வந்தபோது, உயர் அழுத்த மின் ஒயரில் கம்பி உரசியதில் காளீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் காளீஸ்வரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.