முதல்வர் ஸ்டாலின் அண்ணாச்சி.. உங்களின் இந்த வாக்குறுதிகள் என்னாச்சு? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக பாஜக தரப்பில் நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். மொத்தமாக 30 தொகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். நயினார் நாகேந்திரன் சொந்த தொகுதியில் நடைபெற்ற மாநாடு என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த மாநாட்டில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
முதல்வர் ஸ்டாலின் தமிழுக்காக நாங்கள் தான் எல்லாம் செய்தோம் என்கிறார். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்பதாக சொன்னீர்களே.. முதல்வர் அண்ணாச்சி.. அந்த வாக்குறுதி என்னாச்சு? பெட்ரோல், டீசல் விலை குறைப்பீர்கள் என்று சொன்னீர்களே.. முதல்வர் அண்ணாச்சி.. அந்த வாக்குறுதி என்னாச்சு? மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம் என்று சொன்னீர்களே.. தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்வோம் என்று சொன்னீர்களே.. முதல்வர் ஸ்டாலின் அண்ணாச்சி.. உங்களின் வாக்குறுதி என்னாச்சு?
அரசு மருத்துவமனை பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னீர்களே.. அந்த வாக்குறுதி என்னாச்சு? அதேபோல் மாதாந்திர மின் கணக்கீட்டு முறை கொண்டு வருவோம் என்று சொன்னீர்களே.. அந்த வாக்குறுதி என்னாச்சு அண்ணாச்சி.. மின் கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது.. அரசு அலுவலகங்களில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று சொன்னீர்களே? ஒன்றியம் தோறும் தானியக் கடங்கு அமைப்போம் என்று சொன்னீர்களே? பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று சொன்னீர்களே? முதல்வர் ஸ்டாலின் அண்ணாச்சி.. அந்த வாக்குறுதி என்னாச்சு.. இப்படியே 400க்கும் அதிகமான வாக்குறுதிகளை பற்றி கேள்வி கேட்க முடியும்.
வாக்குறுதி கொடுப்பது அவரது வழக்கம்.. தேர்தலுக்கு பின் அதனை மறப்பது அவர்களின் வழக்கம்.. இப்படிதான் தமிழ்நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை காலம்தான் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்.. சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்.. பல வகைகளில் சமயம் பார்த்து கொள்ளை அடிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
