“இந்து மதம் அழிக்கப்பட வேண்டும். ராமனும் ஒன்றுதான், ராமதாஸும் ஒன்றுதான். பார்ப்பனர்களின் கருத்தியலை நடைமுறைப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்” என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கு சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பங்கேற்றுப் பேசியதாவது:-
ராமன் வாள் ஒன்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் செல்லும் போது அங்கே ஒருவன் தலைகீழாக தொங்கிக் கொண்டு இருக்கின்றான். அவனிடம் நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என ராமன் கேள்வி கேட்கிறான். அப்போது எனது பெயர் சம்பூகன், நான் வேட்டுவ சமூகத்தைச் சேர்ந்தவன். தற்போது தவம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறான். கீழ் ஜாதியைச் சேர்ந்த நீ எப்படி இந்த தர்மத்தைச் செய்ய முடியும்? அந்தந்த ஜாதிக்கு என தர்மம் உள்ளது என்று கூறி தலைமையை வெட்டி படுகொலை செய்கிறான். படுகொலையின் போது தெறித்த ரத்தத்தால் அந்த குழந்தை உயிர்ப்பித்ததாக கதையில் சொல்லப்படுகிறது. இந்த கொலைக்கு பின்னால் ஆணவக் கொலைகளுக்கு பின்னணியில் ஒரு கோட்பாடு உள்ளது. இந்த கோட்பாடு தான் சனாதன கோட்பாடு, வர்ணாசிரம கோட்பாடு. இதனை அழித்தொழிக்க வேண்டும் என அம்பேத்கர் சொல்கிறார்.
இந்து மதத்தில் சமத்துவம், சமூக நீதி இல்லை. ஆகவே இந்து மதம் அழிக்கப்பட வேண்டும். இதனால் தான் இந்து மதத்தில் இருந்து அம்பேத்கர் மதம் மாறுகிறார். இந்த படுகொலை எங்கிருந்து தொடங்குகிறது. இந்த கோட்பாட்டை வர்ணாசிரமத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது அவர்களின் நுட்பமான அரசியல். ராமன் பார்ப்பனர் கிடையாது, ஆனால் பார்ப்பனர்களுக்காக படுகொலை செய்தார். அதே போன்று ராமதாஸ் பார்ப்பனர் கிடையாது, ஆனால் பார்ப்பனியர்களின் கருத்தியலை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வேலையை செய்கிறார். கருத்தியல் ரீதியாக ராமதாஸ் செய்வதும், ராமன் செய்ததும் ஒன்று தான். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
