எருமை மாடு கூட கருப்பு தான்: சீமான்!

நானும் கருப்பு கலர் தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்த நிலையில் எருமை மாடு கூட கருப்பு தான் என்று சீமான் பங்கம் செய்து இருப்பது தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் புத்தகம் ஒன்றுக்கு அணிந்துரை எழுதி இருந்தார். அந்த அணிந்துரையில் இளையராஜா கூறி இருப்பதாவது: சமூக நீதி விஷயத்தில் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முத்தலாக் தடை போன்ற உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். இவ்வாறு அந்த புத்தக அணிந்துரையில் இளையராஜா கூறி இருந்தார்.

இளையராஜா எழுதிய இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பும், பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ள சூழலில், தன் கருத்தை இளையராஜா பின்வாங்க வேண்டும் என ஒரு தரப்பினர் தீவிரமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே சமயம் தனது கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவது இல்லை என்பதை இளையராஜா தனது சகோதரர் கங்கை அமரன் மூலம் மிகவும் தெளிவாகவே கூறிவிட்டார்.

இப்படிப்பட்ட சூழலில் இளையராஜாவின் மகனும், பிரபல இசையளைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா கறுப்பு உடை அணிந்த தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து, ‘கறுப்பு திராவிடன். பெருமைமிகு தமிழன்’ என குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, ‘என்னை விட கறுப்பு தமிழன், கறுப்பு திராவிடன் யார் இருக்கிறார்? யுவன்சங்கர் ராஜாவை விட, கருப்பு தமிழன் நான். கருப்பு திராவிடன் நான். யுவன் சாதாரண கருப்பு. நான் அண்டங்காக்கை கருப்பு, இவ்வாறு அண்ணாமலை கூறியிருந்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த இந்த பேட்டி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்ததால், அவரது கருத்தை சமூக வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் அண்ணாமலையை கலாய்க்கவும் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இது இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து. தம்பி யுவன், திராவிடனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழனாக இருக்க வேண்டும். யுவன்சங்கர் ராஜா சின்ன பிள்ளை என்பதால் குழம்பி போய் இருக்கிறார். கறுப்பாக இருப்பதால் தான் திராவிடன் என்று, அண்ணாமலை கூறுகிறார். எருமை மாடு கூட தான் கருப்பாக இருக்கிறது. அதற்காக அதை திராவிடன் எனக் கூற முடியுமா?. இவ்வாறு அவர் கூறினார்.