அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி

உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டம், தியோதர் பகுதியில், புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை, நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:

பனஸ்கந்தாவில் உள்ள புதிய பால் பண்ணை மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இப்பகுதி, கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதுடன், இந்தியாவுக்கும் உத்வேகம் அளிக்கிறது.உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம், பாலை நம்பியே இருக்கிறது. இந்தியா, ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பால் உற்பத்தி செய்கிறது. கோதுமை மற்றும் அரிசி கூட, இந்த அளவை எட்டவில்லை.பால்பண்ணைத் துறையின் மிகப்பெரிய பயனாளியர் சிறு விவசாயிகள் தான். இவ்வாறு பிரதமர் பேசினார்.பாரம்பரிய மருத்துவ மையத்துக்கு அடிக்கல்குஜராத்தின் ஜாம் நகரில், உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவ மையத்தை அமைக்க, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையடுத்து, ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலகின் முதல் சர்வதேச மையத்தை அமைக்க, பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.இதில், இந்திய பெருங்கடல் தீவு நாடான மொரிஷியசின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகன்நாத், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசிஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.