இலங்கைக்கு இந்தியா மேலும் கடன் உதவி

இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. எரி பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடன் உதவி வழங்கப்படுகிறது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. 1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7,600 கோடி) நிதி உதவிகள் அறிவித்த இந்தியா, இலங்கைக்கு டீசல், அரிசியை அனுப்பியது. ஆனால் இந்தியா வழங்கிய உதவிகள் இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும் சூழல் நிலவுவதால் இலங்கை மீண்டும் கடனுதவி கேட்டு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக இந்தியா பரிசீலித்து வந்தது.

இந்த நிலையில் இலங்கைக்கு மேலும் ரூ.3,800 கோடி கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. இது குறித்து இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறும் போது, “இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. எரி பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடன் உதவி வழங்கப்படுகிறது. வங்காளதேசத்திடம் பெற்ற 450 மில்லியன் டாலர் கடனை மீளச் செலுத்தவற்கான கால அவகாசத்தை அந்நாடு நீடித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைக்கப் பெறுவதற்கு ஆறு மாத காலம் தேவைப்படும். அதுவரையில் அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்தவற்கு இந்த கடன் உதவிகளை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது என்றார்.