ஜெயலலிதா மரணம்: விசாரணையை நிறைவு செய்த ஆறுமுகசாமி ஆணையம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அமைத்தது. இதையடுத்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்பல்லோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வந்தது.

விசாரணை கமிஷனின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டு வருவது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வந்ததற்கிடையே, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு 2 ஆண்டுகள் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து , மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் நியமித்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை கடந்த 7ஆம் தேதி மீண்டும் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி ஆணையம் விசாரித்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரித்து வந்த நிலையில், விசாரணை நிறைவு பெற்றதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, புகழேந்தி வாக்குமூலத்தின் அடிப்படையிலும், எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே மனு அளிக்கப்பட்டிருப்பதாலும், அவரிடம் விசாரிப்பது பற்றி இன்று ஆறுமுகசாமி ஆணையம் முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், விசாரணை நிறைவு பெற்றதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 156 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்துள்ளது. அடுத்தக்கட்டமாக தமிழக அரசிடம் ஆணையம் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. ஆணையத்தின் விசாரணை முழு திருப்தி அளிப்பதாக அப்பல்லோ வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் நேரில் விசாரிக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுடன் ஆரம்பம் முதலே உடனிருந்தவர் சசிகலா மட்டும்தான். போயஸ்கார்டன் இல்லத்திலும் சரி, அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று, அது பலனளிக்காமல் உயிரிழந்தது வரை அவருடனேயே இருந்தவர் சசிகலா. ஆனால், சசிகலா சிறையில் இருந்தபோது, ஆணையத்தின் நோட்டீஸை ஏற்று, தனது வக்கீல் மூலம் பிரமாணப் பத்திரம் மட்டுமே சசிகலா தாக்கல் செய்திருந்தார்.